கருவுற்றிருக்கும் தாய்மார்கள் என்றும் அழியா வேதிப்பொருட்களுடன் (PFAS-Per- And polyfluorinaced Substances For Ever Chemicals) அதிகமாகத் தொடர்பு கொள்வதால் குழந்தை பிறப்பு பாதிக்கப்படுகிறது. பிறக்கும் குழந்தைகள் வாழ்க்கையின் பிற்பகுதியில் உடற்பருமனால் பாதிக்கப்படுகின்றனர் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. கர்ப்பமான தாய் புகையிலையைப் பயன்படுத்துவதால் உருவாகும் அதே பாதிப்பு இதனால் ஏற்படுகிறது என்று அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.
பிரசவத்திற்கு முன் புகையிலையைப் பயன்படுத்திய தாய்மார்களுக்குப் பிறந்த 1400 குழந்தைகளிடம் நடத்தப்பட்ட அதன் தீய விளைவுகள் பற்றிய ஆய்வில் இதேபோன்ற பாதிப்பு ஏற்படுவது தெரியவந்தது. மேலும் 2 முதல் 5 வயதிற்குள் குழந்தை உடற்பருமனால் பாதிக்கப்படுவது முந்தைய ஆய்வில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதே நிலை என்றும் அழியா வேதிப்பொருட்கள் மூலமும் ஏற்படுவது அதிர்ச்சியளிக்கிறது என்று பிரவுன் (Brown) பல்கலைக்கழக விஞ்ஞானி மற்றும் ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியர் ஜோ ப்ரான் (Joe Braun) கூறுகிறார்.
என்றும் அழியா வேதிப்பொருட்களில் 15,000 பொருட்கள் உள்ளன. இவை நீர், கறைகள் மற்றும் வெப்பத்தினால் பாதிக்கப்படாமல் இருக்க பல துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன. மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் இவை புற்றுநோய், தைராய்டு நோய்கள், சிறுநீரகக்கோளாறுகள், பிறவிக் குறைபாடுகள், நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடுகள் போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இயற்கைச் சூழலில் மக்குவதில்லை என்பதால் இவை என்றும் அழியா வேதிப்பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன.
நஞ்சுக்கொடி இரத்தத்தில்
30,000 மாதிரிகளில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் இப்பொருட்கள் தாயின் நஞ்சுக்கொடி இரத்தத்தில் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொருட்கள் கருவுற்றிருக்கும் தாய் மற்றும் சிசுவிற்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி இதே விஞ்ஞானிகள் நடத்திய முந்தைய ஆய்வுகள் முழுமையடையவில்லை. முன்பை விட புவியியல்ரீதியாக உலகின் பல இடங்களில் இப்பொருட்களுடன் நீண்ட நாள் தொடர்பு கொண்டவர்களிடம் இருந்து அதிக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நடத்தப்பட்டதால் இப்போதைய ஆய்வுமுடிவுகள் முழுமையானது. வலுவான சான்றுகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.
புகையிலைப் பொருட்களை தாய் பயன்படுத்துவதால் குழந்தைக்கு ஏற்படும் உடற் பருமனை விட இப்பொருட்களால் குழந்தைகள் விரைவாக குண்டாகின்றனர். இவர்கள் பக்கவாட்டில் வளர்வது போல உயரத்தில் வளர்வதில்லை. இயல்பான எடையுடன் பிறக்கும் குழந்தைகளை விட அறுவை மூலம் பிறக்கும் குழந்தைகளிடம் இது அதிகமாகக் காணப்படுகிறது.
மீத்தைலேற்றம்
இந்த வேதிப்பொருட்கள் டிஎன்ஏ மீத்தைலேற்றம் (methylation) என்ற நிகழ்வை பாதிப்பதால் இவ்வாறு நிகழலாம் என்று பிரவும் பல்கலைக்கழக ஆய்வாளர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் மற்றொரு இணை ஆசிரியர் ஜெமி லியூ (Jamie Liu) கூறுகிறார். செல்களை உடல் எவ்வாறு உருவாக்குகிறது என்பதை மீத்தைலேற்றம் என்ற செயல்முறை குறிக்கிறது.
உடலில் உற்பத்தி செய்யப்படும் செல்கள் அனைத்தும் ஒரே வகையான டி என் ஏவை பெற்றிருக்கிறது. ஆனால் உருவாக்கப்படும் செல்களில் எது கண் செல், எது சிறுநீரகச் செல் என்பதைத் தீர்மானிக்கும் உடற்செயலியலில் மீதைலேற்றம் முக்கியப்பங்கு வகிக்கிறது. தாயின் கருவில் சிசு வளரும்போது டிஎன்ஏ மீத்தை லேற்றம் செயல்முறை குழந்தை பிறந்தபின் அது வெளியுலக வாழ்க்கையை எவ்வாறு வாழப்போகிறது என்பதைத் தீர்மானிக்கும் இயக்கிகளில் (switches) ஒன்று.
வளர்சிதை மாற்றமும் என்றும் அழியா வேதிப்பொருட்களும்
ஆய்வுக்குழுவினர் 2022இல் டிஎன்ஏ மீத்தைலேற்றத்தின் காட்டிகளை (markers) பயன்படுத்தி வெள்ளை இரத்த அணுக் களை ஆராய்ந்தபோது இந்த வேதிப்பொருட்கள் குழந்தையின் பிறப்பில் இருந்து அதன் 12 வயது வரை உடலின் வளர்சிதை மாற்றத்தில் ஆற்றல் பயன்பாட்டை வெகுவாக பாதிக்கிறது என்று கண்டுபிடித்தனர். இது குழந்தையின் பிற்கால வளர்ச்சியை பாதிக்கிறது. சிசுவாக இருக்கும்போது இந்த பொருட்களுடன் அதிக தொடர்பு ஏற்படுவதால் குழந்தைகள் 12% அதிக உடற்பருமனால் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகள் பிற்கால வாழ்வில் உடற்பயிற்சி மூலம் இந்த பாதிப்பை சரிசெய்ய லாம் என்று ப்ரான் கூறுகிறார். ஆனால் இப்பொருட்கள் பெருமளவில் நம்மை சுற்றி இருப்பதால் தாய்மார்கள் இந்தப் பாதிப்புகளில் இருந்து தங்களையும் கருவில் இருக்கும் சிசுவையும் பாதுகாப்பது கடினம். அமெரிக்க அரசின் புள்ளிவிவரங்களின்படி அந்நாட்டில் 98% மக்களின் இரத்தத்தில் இப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றின் அரை ஆயுட்காலம் (halflife) நீண்டது என்பதால் தாய் கருவுறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே உருவாகப் போகும் சிசு இந்த பொருட்களால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இதனால் இப்பொருட் களுடன் நமக்கு உள்ள தொடர்பைக் தவிர்க்க உதவும் வழிகளை பின்பற்றுவதே சிறந்தது.
சில தீர்வுகள்
நீரை வடிகட்டிக் குடிப்பது இதில் ஒன்று. இந்த வேதிப்பொருட்கள் குடிநீர் மூலம் மட்டும் அமெரிக்காவில் 200 மில்லியன் பேரை பாதித்துள்ளது. வீட்டுக்குள் இருக்கும் மாசினால் பாதிப்பு ஏற்படுகிறது. வடிகட்டியுடன் கூடிய வெற்றிட சுத்தப்படுத்தியை (vacuum cleaner) பயன்படுத்துவதன் மூலம் இதைத் தவிர்க்கமுடியும். உணவுமுறையின் மூலமும் இப்பொருட்கள் நம் உடலிற்குள் நுழைகின்றன. இவை உணவுகளைப் பொட்டலமிடுதலில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. புதிதாகத் தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்ணுதல் மற்றும் சரிவிகித உணவுமுறை இதற்கு தீர்வாக அமையும். விவேகமற்ற முறையில் வேதிப்பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்துவதன் மூலம் இது போன்ற ஆபத்தான அச்சுறுத்தல்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ளலாம். சுகமாக வாழலாம் என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் வலியுறுத்துகின்றன.